கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் 23 வயது மாணவன் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 23 வயது மாணவனைத் தவிர, இந்த மாணவனுடன் தொடர்பு கொண்ட 86 பேரை கேரள சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் இப்போது நிபா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறு குறித்து கண்காணிப்பில் உள்ளனர்.
நிபா வைரஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே:
நிபா வைரஸ் (NiV) என்றால் என்ன?
நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் வைரஸ், அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நிபா வைரஸ் பழ வெளவால்களிடமிருந்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுகிறது. இந்த வைரஸ் 1998-1999 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. பொதுவாக, இந்த வைரஸ் நாய்கள், குதிரைகள், பன்றிகள் போன்ற விலங்குகளை பாதிக்கிறது. நிபா வைரஸ் மனிதர்களிடையே பரவினால், அது கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும், மேலும் அது மரணத்தை விளைவிக்கும்.
நிபா வைரஸ் மனிதர்களிடையே எவ்வாறு பரவுகிறது?
நிபாவால் பாதிக்கப்பட்ட வௌவால்கள், பன்றிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினால் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
பழங்களுக்காக மரத்தில் ஏறும் போதோ அல்லது அசுத்தமான பழங்களை உண்ணும்போதோ அல்லது பச்சையாக பேரீச்சம்பழ சாறு / ஜூஸ் உட்கொள்ளும் போதோ, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்களின் சுரப்பு மக்களைப் பாதிக்கலாம். விலங்குகளிடம் இருந்து மனிதனைத் தவிர, நிபா வைரஸ் மனிதர்களிடையேயும் பரவுகிறது. ஒரு ஆரோக்கியமான நபர், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் போது, வீட்டிலோ அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சையின் போதும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் யாவை?
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்டவற்றால் பாதிக்கப்படலாம்:
- மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தொடர் இருமலுடன் கூடிய காய்ச்சல்
- மூளை காய்ச்சல்
- கடுமையான சுவாச தொற்று (கடுமையான அல்லது லேசான)
- காய்ச்சல் போன்ற அறிகுறிகள் (காய்ச்சல், தலைவலி, தசை வலி, பக்கவாதம், வாந்தி, தொண்டை புண், தலைச்சுற்றல், தூக்கம்) மூளை அழற்சியைக் குறிக்கும் நரம்பியல் கோளாறுகள்.
- நிமோனியா (சில சந்தர்ப்பங்களில்)
- கடுமையான சுவாசக் கோளாறு உட்பட கடுமையான சுவாச பிரச்சனைகள்
- 24 – 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு முன்னேறும் தீவிர நிகழ்வுகளில் வலிப்பு மற்றும் மூளையழற்சி ஏற்படலாம்
நிபா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?
நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், குறைக்கவும் மற்றும் பரவுவதைத் தவிர்க்கவும், ஒருவர் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
- பாதிக்கப்பட்ட நபர் அல்லது வைரஸுடன் தொடர்பு கொண்ட பிறகு தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கைகளை நன்கு கழுவவும்.
- பச்சையான பேரீச்சம்பழ சாற்றையோ அல்லது ஜுஸையோ குடிக்க வேண்டாம்.
- பொதுவாக கழிப்பறை அல்லது குளியலறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், உடைகள் மற்றும் குவளைகள் மற்றும் வாளிகள் போன்ற பொருட்களை தனித்தனியாக சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
- நிபாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்கள் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கையாளப்பட வேண்டும். இதில் எந்த அலட்சியமும் நிலைமையை மோசமாக்கும்.
- பழங்களை நன்றாகக் கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். பாதி உண்ட பழங்களை தரையில் வைத்து சாப்பிடக் கூடாது. இந்த பழங்களை பாதிக்கப்பட்ட விலங்குகள் சாப்பிட்டிருக்கலாம், குறிப்பாக நிபா வைரஸை பரப்பும் பறக்கும் நரி.